Monday, July 04, 2005

நாட்டுப்புறப் பாடல்கள்

பழைய நாட்டுப்புறப் பாடல்களில் உள்ள சுகமே தனி. என் மாமியார் இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்தவர். குழந்தைகளுக்காக அவர் பாடும் சில பாடல்களையும் - அந்தப் பாடல்களை பற்றிய எனது எண்ணங்களையும் இங்கு பதிகிறேன். இந்தப் பாடல்கள் பெருவாரியாக வாய்மொழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாய் வந்திருக்கின்றன. இதில் பல்வேறு விதமான மருவுகள் இருக்கலாம். உங்களுக்கு இதைப் போன்ற பாடல்கள் தெரிந்தால் தயவுசெய்து பதியவோ அல்லது சுட்டி கொடுக்கவோ தயங்காதீர்.

முதலாவதாக 'பாட்டி' பற்றிய பாட்டு. ஒரு வயதான பாட்டி தன் பேரனோடு உரையாடுவது போல இருக்கும் பாட்டு. பேரன் பொருட்களைப் பற்றி பேசும் போதெல்லாம் காது கேளாததால் உரக்க சொல்லுமாறு கேட்பதும், பாசத்துடன் கட்டிக் 'கொள்ளவா?' என்றவுடன் அது காதில் விழுந்து அருகே வரச் சொல்லுவதும் மிகவும் யதார்த்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

பாட்டி

பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
புகையிலை கிராம்பு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
நகை நட்டு வேணுமா?
காது நல்லா கேக்கல
இன்னும் உரக்க சொல்லம்மா

பாட்டி பாட்டி பாட்டி
உன்னை நான் கட்டிக்கவா?
காது நல்லா கேக்குது
இன்னும் கிட்ட வாப்பா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.