உள்ளோட்டம்

Saturday, November 19, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 4

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிவடைந்தது ஒரு பெரும் பாரத்தை மனத்தில் இருந்து இறக்கியது. அறுவை சிகிச்சை முடிந்தபின் குழந்தைக்கு வலி தெரியாமல் இருக்க "Acetaminophen" என்ற மருந்தும், அறுவை சிகிச்சைக்கு பின் உடலில் சேரும் கழிநீரை கழிக்க "Diuretic" என்ற மருந்தும் கொடுத்தோம். அறுவை சிகிச்சை முடிந்த முதல் வாரத்தில் அவனை குழந்தைகள் மருத்துவரிடமும் (“Pediatrician”) மற்றும் இருதய மருத்துவரிடம் (“Cardiologist”) அழைத்துச் சென்றோம். இருதய மருத்துவர் அவனுடைய "Platelletes" எண்ணிக்கையைப் பார்க்க இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். மருத்துவமனையில் இந்த எண்ணிக்கை கம்மியாக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யும்போது இரத்தம் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு மருந்து செலுத்துகிறார்கள். சில பேருக்கு ஒரு வாரத்தில் "Platelletes" எண்ணிக்கை பழைய நிலைக்கு வந்துவிடும். இவனுக்கு மூன்று வாரத்தில் அந்த எண்ணிக்கை சரியானது. இருதய மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு காயம் ஆறிய இடத்தில் ஏதேனும் சதையோ ("Scar tissue") அல்லது நீர் சேர்ந்து இருக்கிறதா என்று "Echo cardiogram" செய்து பார்த்தார். பிறகு அவன் நன்கு முன்னேறி வருவதாகச் சொன்னார். காயம் ஆறிய பிறகு 8-வது வாரத்தில் அவனுடைய தையல்களை இருதய மருத்துவர் பிரித்தார். பிறந்ததிலிருந்து குழந்தையை வயிற்றில் படுக்க விடாததால் தலை நிற்கவில்லை. மேலும் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக அவன் குப்புற கவிழாமல் இருக்க கவனமாக இருந்தோம். இனிமேல் அவன் குப்புற கவிழ்ந்தால் பரவாயில்லை என்று மருத்துவர் சொன்னார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதம் கழித்து "Apnea Clinic" சென்றோம். அவனுடைய சுவாசிக்கும் முறை சரியாக இருப்பதால் இனிமேல் "Apnea monitor" தேவையில்லை என்று சொன்னார்கள். பிறப்பில் இருந்த குறைபாடுகள் ஒவ்வொன்றாக நீங்கிவிட்டது. அவனுக்கு சிறுநீரகத்தில் உள்ள "Reflux"-ம் இதே போல நீங்கிவிடும் என்று நம்புகிறோம்.

குழந்தை பிறந்ததிலிருந்து அவனுடைய உடல்நிலை காரணமாக அவன் வயதுக்கேற்றபடி தசை வலுவடையவில்லை ("Lack of Muscle tone"). அவனுக்கு இடது பக்கம் சிறிது வலு கம்மியாக இருந்தது. இதற்காக நரம்பியல் மருத்துவரைப் ("Neurologist") பார்த்தோம். அவர் சொன்னபடி அறுவை சிகிச்சை முடிந்து எட்டு வாரத்திற்கு பிறகு அவனுக்கு உடற்பயிற்சி ("Physical therapy") செய்ய ஆரம்பித்தோம். அவன் அப்போது உடல் அளவில் பிறந்த குழந்தை போலிருந்தான், ஆனால் மனத்தளவில் ஏழாம் மாத குழந்தை போல் செய்ய நினைத்தான். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த இரண்டு மாதத்தில் குப்புற கவிழ்ந்தான். மூன்று மாதத்தில் நீந்த ஆரம்பித்தான். ஆறு மாதத்தில் உட்கார ஆரம்பித்தான். ஏழாவது மாதத்தில் தவழ ஆரம்பித்தான். அவனுடைய தசையின் வலு அதிகரிக்க உட்கார்ந்து விளையாடுவதும், சில ஒலிகளை உச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறான். உடலில் மார்பு, மற்றும் கழுத்து வலுவடைந்தால்தான் வார்த்தைகளும் வருமாம். இவன் தன்னுடைய வயது குழந்தைகள் போல வலுவடையவும், பேசவும் இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம். மூன்று வயதாகும்போது மற்ற குழந்தைகள் போலவே எல்லாம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கால்பந்தாட்டம் போன்ற "Contact Sports"-ஐ தவிர மற்ற துறைகளில் அவன் உடலும், மனமும் இடம் கொடுக்கும் வரையில் என்ன வேண்டுமானாலும் அவன் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பிரசவ காலத்தில் "Sciatica" வலியினால் அவதிப்பட்டேன். மேலும் குழந்தையிடம் கோளாறு இருப்பதாக எண்ணி வருந்தினேன். பிறகு குழந்தையிடம் குறை ஒன்றும் இல்லை என்று மகிழ்ந்தேன். குழந்தை பிறந்ததும் குறைகள் கேட்டு அதிர்ந்தேன். என்னுடைய வலிகளும் குறையாததை நினைத்து கவலை கொண்டேன். சில நேரம் கடவுளிடம் சொல்லி அழுதேன். குழந்தையின் போராட்டத்தில் என்ன ஆனாலும் மனம் தளராமல் ஒத்துழைக்க உறுதி கொண்டேன். எங்களுடைய பெற்றோர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். எங்களுடைய மகள், நாங்கள் மனம் தளராமல் இருக்க வடிகாலாக இருந்தாள். எங்களுக்காக உறவினர்களும், நண்பர்களும் கடவுளை வேண்டிக்கொண்டார்கள். இவர்களின் பிரார்த்தனையின் வலிமை, மருத்துவக் குழுவின் திறமை, என் குழந்தையின் விடாமுயற்சி மற்றும் எங்கள் எல்லோரின் நம்பிக்கை இந்த சோதனை கட்டத்தை தாண்டவைத்தது. எங்களுடைய அனுபவம் எங்களை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. எங்கள் குழந்தைச் செல்வங்களை இன்னும் அதிகமாகப் போற்றுகிறோம். இவ்வளவு தூரம் வழி காட்டிய இறைவனுக்கு தினமும் நன்றி செலுத்துகிறோம்.

இது போன்ற சோதனை இந்த தொடரைப் படிப்பவர்களுக்கு வரவேண்டாம். அப்படி வந்து விட்டால் எந்த ஒரு தாயும் இது தன்னால்தான் வந்ததோ என்று எண்ணி வருந்தாதீர்கள். உங்களுடைய உணர்ச்சிகளை உள்ளே பூட்டி வைக்காதீர்கள். குழந்தை பிறந்த பிறகு உங்கள் உடலையும் கவனித்துக் கொள்ளவேண்டும், அதனால் மற்றவர்கள் வீட்டில் உதவி செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றோர்கள் எடுக்கும் எந்த முடிவும் குழந்தையின் நலன் கருதியே இருக்கும், அதனால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து நம்மை எதிர்நோக்கி இருப்பது ஒரு தொடர் பந்தயம், அதனால் ஒவ்வொரு கட்டமாகத் தாண்டுவதைப் பற்றி எண்ணுங்கள். இந்த குழந்தையைப் பராமரிக்க உங்களால்தான் முடியும் என்று இறைவன் உங்களிடம் அனுப்பியிருக்கிறான். அதனால் விடியல் தொலைவில் இல்லை என்று எண்ணி திடமாக இருங்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, November 18, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 3

இப்படியாக குழந்தைப் பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டது. என் அப்பா எங்களுக்கு உதவிக்காக வந்தார். குழந்தையின் சுவாசிக்கும் முறை அவன் பிறந்து 9-வது வாரத்தில் சரியாகியது. பிறந்து 14-வது வாரத்தில் பால் குடிப்பதற்கும் கற்றுக் கொண்டான். என் மாமனார், மாமியார் விசா முடிவடைந்ததால் ஜனவரி 1-ம் தேதி இந்தியா திரும்பிச் சென்றார்கள். குழந்தைக்காகவும், என்னுடைய முதுகு மற்றும் இடுப்பு வலி குறையாததால், என் காரணமாகவும், அடிக்கடி மருத்துவரிடமும், மருத்துவமனைக்கும் சென்றதால், இவர்கள் எங்களுடன் இருந்தது, மனதிற்கு மிகவும் தெம்பை அளித்தது. அவனுக்கு 4 வது மாதம் முடிந்த பிறகு வழக்கமாகச் செய்யும் இருதய பரிசோதனைக்காக ஜனவரி 7-ம் தேதி மருத்துவரிடம் சென்றோம். அவனுடைய “Valve”-ன் அடைப்பு அதிகரிப்பதால், அடுத்த ஒரு மாதத்திற்குள் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார். அப்போது அவனுடைய எடை “10 pound” (4.53 கிலோ) இருந்தது. "Children’s hospital, Philadelphia -வின்", இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிலையத்தின் தலைமை மருத்துவர், Dr. Spray – உடன், அறுவை சிகிச்சைக்கான நேரம், ஜனவரி 13-ம் கிடைத்தது. இதை ஏற்பாடு செய்த நர்ஸ், எங்களிடம் அங்கே தங்குவதற்கான மற்ற விபரங்களையும் சொன்னார். "Ronald McDonald house" என்ற விடுதி, இது போன்ற குழந்தைகளின் குடும்பங்கள் வந்து தங்குவதற்கான வசதிகளுடன் இருக்கும் என்று சொன்னார். இதை பற்றிய விவரம் அறிய இந்த வலைதளத்திற்கு “http://www.philarmh.org/be_our_guest.php” செல்லவும் .

வீட்டிற்கு வரும்போது மனதில் கலக்கம், இருந்தாலும் இதுவரை வழிகாட்டிய கடவுள் கண்டிப்பாக கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்தது. கர்ப காலத்தில் 20-வது வாரத்தில் “Amniocentesis”-ல் இருந்த கண்டத்தைத் தாண்டியது, 30-வது வாரத்திலே பிறந்து பல இன்னல்களைத் தாண்டவைத்தது, பிறந்து நான்காம் மாதம் வரை அறுவை சிகிச்சைக்கு தேவையான எடை ஏறியது, மற்றும் எந்த ஒரு சிக்கலும் வராமல் இருந்தது எல்லாமே கடவுள் அருள்தான். அதுவும் நாங்கள் அறுவை சிகிச்சை செய்வதற்காக போகும் மருத்துவமனை உலகப் பிரசித்தி பெற்றது.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் குழந்தைக்கு எந்த ஒரு “Infection”-ம் இல்லாமல் இருக்கவேண்டும், மேலும் நுரையீரலில் சளி சேராமல் இருக்கவேண்டும் (“Chest Congestion”). குழந்தை பிறந்தததிலிருந்து, குழந்தைக்கு சளியோ, ஜூரமோ வரக்கூடாது என்பதற்காக நாங்கள் நண்பர்களையோ, விருந்தினர்களையோ வீட்டிற்கு அழைத்ததில்லை, நாங்களும் யார் வீட்டிற்கும் சென்றதில்லை. குளிர்காலத்திற்கு முன்னால் வீட்டில் அனைவரும் "flu" ஜூரம் வராமல் இருப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டோம். என் கணவர் வேலை நிமித்தமாக வெளியே செல்வது தவிர்க்கமுடியாதது. அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரம் முன்னால் என் கணவருக்கு ஜூரம் வந்தது, பிறகு என் மகளுக்கு காதில் “Infection” வந்தது. நல்ல வேளையாக என் மகனுக்கு ஒன்றும் இல்லை.

என் அப்பாவின் நண்பர் "Children's hospital philadelphia" மருத்துவமனைக்கு சிறிது அருகில் இருந்தார். என் மகளையும், அப்பாவையும் நண்பர் வீட்டில் தங்கவைத்தால் நாங்கள் எங்கள் குழந்தையின் மேல் முழு கவனம் செலுத்தலாம் என்று அவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டோம். அது பொங்கல் தினம், பண்டிகை நாள், அவர் தாராளமாக வாருங்கள் என்று சொன்னார். நாங்கள் எங்களுக்குத் தேவையான துணி, குழந்தைகளுக்கான துணி, விளையாட்டு சாமான்கள், எங்களுக்குத் தேவையான மருந்து, மற்றும் என் மகனுக்காக “Apnea monitor”, “Pulse Oximeter” எடுத்துக் கொண்டு ஜனவரி 12-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு முதல் நாள் செய்ய வேண்டிய பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றோம்.

அங்கு குழந்தைக்கு மார்புக்கான எக்ஸ்-ரே (Chest X-Ray), மற்றும் இரத்தப் பரிசோதனை செய்தார்கள். பிறகு எங்களுக்கு மறுநாள் நடக்க இருக்கும் அறுவை சிகிச்சை பற்றி, அங்கே பயிற்சிக்காக இருக்கும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ("Resident") விரிவாகச் சொன்னார். முதலில் குழந்தையை மயக்க நிலையில் ஆழ்த்துவார்கள், பிறகு குழந்தையின் இருதயத்தின் வேலையை இருதய-நுரையீரல் இயந்திரம் (“Heart-Lung machine/Cardiopulmanory bypass machine”) செய்யும். அவனுடைய இருதயத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வார்கள், இருதயத்துடிப்பு சரியாக வந்துவிட்டவுடன், சிறிது நேரம் கழித்து “Bypass” இயந்திரத்தை நிறுத்தி விடுவார்கள். மயக்கத்தில் ஆழ்த்துவதிலிருந்து, ஒரு இடர்பாடும் இல்லாமல் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் குழந்தையை நான்கு மணி நேரம் கழித்து பார்க்கலாம் என்றார். குழந்தைக்கு முதல் நாள் 2:00 மணிக்கு தண்ணீர் (“Pedialyte") கொடுக்கலாம் என்றும் அதற்குப் பிறகு எந்த ஒரு ஆகாரமும் கொடுக்கக் கூடாது சொல்லி மறுநாள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறினார். பிறகு குழந்தையை என் அப்பாவின் நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.

மறுநாள் காலை 7:30 மணிக்கு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். என் மகளும், அப்பாவும் நண்பர் வீட்டில் தங்கியிருந்தார்கள். முதலில் செய்ய வேண்டிய பரிசோதனைக்கு பிறகு, குழந்தையை அறுவை சிகிச்சை முழுவதும் மயக்க நிலையில் வைக்கும் மருத்துவர் (“Anesthesiologist”), குழந்தையை எங்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். அவரிடம் கொடுத்த போது என் கண்களில் நீர் வந்தது, அவர் குழந்தைக்கு ஒரு வலியும் தெரியாமல், ஒரு mask-ஐ மூக்கில் வைத்து மயக்கத்தில் ஆழ்த்துவோம். குழந்தை உங்களிடம் 4 மணி நேரம் கழித்து பத்திரமாக வருவான் என்றார். இதற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப் போகும் Dr. Thomas Spray-யை முதன் முறையாகப் பார்த்தோம். அவரைப் பார்த்தவுடன் மனதில் இருந்த நம்பிக்கை அதிகரித்தது. கடவுள் அவர் மூலமாக என் குழந்தையைக் காப்பாற்றுவார் என்று தோன்றியது. அவர் தினமும் ஒரு குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்கிறார். "குழந்தைக்கு 5 குறைபாடுகள் இருந்தாலும், முக்கியமானது இருதயத்தின் கீழ்பாகத்தில் உள்ள பெரிய ஓட்டையை (“VSD”) அடைப்பது, "Aorta"-வின் இடத்தை மாற்றுவது (அதற்கு ஒட்டையை அடைக்கும்போதே வழி செய்துவிடுவோம் என்றார்), மேலும் "Pulmonary Valve"-வில் அடைத்திருக்கும் சதையை எடுத்துவிடுவது" என்று கூறினார். ஒரே அறுவை சிகிச்சையில் அனைத்தையும் செய்ய முயற்சி செய்வோம். சில நேரம் Valve-ன் தன்மையைப் பொருத்து, வேறு ஒரு புதிய Valve-வை தைக்க நேரலாம். அப்படி இருந்தால் மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை குழந்தை பெரியவனானவுடன் செய்ய நேரலாம் என்று சொன்னார். எல்லா அறுவை சிகிச்சைக்கும் உரிய அபாயங்கள் இந்த சிகிச்சைக்கும் உள்ளது. அதை தவிர்த்து அறுவை சிகிச்சை செய்யும்போது எங்களுக்கு இருதயத்தின் துடிப்பை ("Rhythm of the Heart")கொடுக்கும் நரம்பு எது என்று சொல்ல முடியாது . அது சரியாக இருக்கிறதா என்று அறுவை சிகிச்சை முடிந்தவுடனேயே சொல்லிவிடமுடியும். அதில் ஏதாவது பிரச்சினை நேர்ந்தால், இருதயத் துடிப்பைத் தரும் கருவி ("Pace maker") வைக்க நேரலாம், இது ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு நிகழும் வாய்ப்பு இருக்கிறது. அந்த கருவியைப் பொருத்துவதற்காக ஒரு கம்பியை ("Pacing Wire") இருதயத்தில் வைதிருப்போம். குழந்தையின் நிலைமை சரியானவுடன் நீக்கி விடுவோம், என்று கூறினார். பிறகு அவர் குழந்தையின் அறுவை சிகிச்சை செய்வதற்காகச் சென்றார்.

என்னையும், என் கணவரையும் எங்கள் குழந்தைக்காக நியமிக்கப்பட்ட நர்ஸ், எல்லா பெற்றோர்களும் காத்துக் கொண்டிருக்கும் அறைக்கு ("Waiting room") அழைத்து சென்றார். அங்கே கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நர்ஸ் எங்கள் குழந்தையின் நிலைமையை எங்களுக்குத் தெரிவித்தார். சுமார் மூன்றரை நேரத்தில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. பிறகு Dr. Spray எங்களை வந்து பார்த்து, எல்லா குறைபாடுகளையும் சரி செய்ததாகவும், குழந்தைக்கு “Valve”-ன் அடைப்பை நீக்கிவிட்டதாகவும், புது “Valve” போடவில்லை என்றும், இருதய துடிப்பு சரியாக இருப்பதாகவும் தெரிவித்தார். எங்களின் மன நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தோம்.

பிறகு குழந்தையை பார்க்க அழைத்து சென்றார்கள். குழந்தையின் மார்பில் கட்டு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த இடம் தெரிந்தது, மேலும் இரண்டு குழாய்கள் இருதயத்தின் மேல்பாகத்தில் வலப்பக்கம் இருக்கும் அறையிலிருந்து எடுக்கப்பட்டது. இது இருதயத்தின் அழுத்ததையும் (“Pressure”), மற்றும் இரத்ததின் கன அளவைக் (“Volume infusion”) கண்காணிக்க உதவியாக இருக்கும். ஒரு "Pacing wire" வெளியே தெரிந்தது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு வரும் திரவியத்தை வெளியேற்ற ஒரு குழாய் இருந்தது. அந்த கருவிகள் பற்றி நர்ஸ் எங்களுக்கு விவரித்தார். அவன் முன்னேற்றத்தைப் பார்த்து ஒவ்வொன்றாக எடுத்து விடுவார்கள், என்றார். குழந்தையின் நிலைமை சீராக இருந்தது. எங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தோம். என் முதுகு மற்றும், இடுப்பு வலி காரணமாக கம்பு வைத்துக் கொண்டிருந்தேன், இதைப் பார்த்த நர்ஸ், அருகிலேயே தங்கினால் வசதியாக இருக்கும் என்று கூறி, "Ronald McDonald House"-க்கு சென்று பதிவு செய்து கொள்ளச் சொன்னார். எங்களுக்கும் அது சரியாகப் படவே, எங்கள் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு, என் மகளுடனும், என் அப்பாவுடனும் அங்கே தங்கினோம்.

இந்த விடுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள், தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ, மற்றும் சமையல் அறையில் சமைப்பதற்காகப் பாத்திரங்கள் மேலும் பல வசதிகள் இருந்தன. மேலும் சில பொதுத்தொண்டு செய்பவர்கள் ("Volunteers") உணவு கொண்டு வந்து அனைவருக்கும் தருகிறார்கள். இங்கே இருக்கும் குடும்பங்கள் "Children’s hospital philadelphia"-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் உறவினர்கள். அதனால் நம் நிலையைப் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. அந்த குடும்பங்களைப் பார்த்து மேலும் நம்பிக்கை உண்டாகிறது. இங்கே என் இரண்டு வயது மகள் மிகவும் மகிழ்சியோடு இருந்தாள். காலையில் நானும் என் அப்பாவும் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்தோம். இரவு என் கணவர் குழந்தையோடு தங்கி இருந்தார். எங்களை அழைத்துப் போவதற்காக விடுதியின் வேன் குறிப்பிட்ட நேரங்களில் வந்தது. குழந்தையின் முன்னேற்றம் சீராக இருக்கவே மருத்துவமனையிலிருந்து 4-வது நாளில் விடுவித்தனர். அவனுக்கு மார்பில் உள்ள கீறல் ஆற 4 வாரங்களும், மார்பு எலும்பு சேர 8 வாரங்கள் ஆகும் என்பதால் அவனைப் பராமரிக்கும் முறைகளை மருத்துவமனையில் எங்களுக்கு கூறினர். அன்றே எங்கள் கண்ணனுடன் வீட்டிற்குத் திரும்பி வந்தோம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, November 17, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 2

30-வது வாரத்தில் பிரசவ வலி அதிகமாக இரத்தம் நிறைய வந்து விட்டது. குழந்தை குறுக்கே (“Breach position”) இருந்ததால் “C-Section” செய்து எடுத்தார்கள், ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 6:21 க்கு எங்கள் கண்ணன் பிறந்தான். குழந்தையின் எடை 1055 கிராம்கள் இருந்தது. குழந்தையை ஒரு நிமிடம் என்னிடம் காட்டிவிட்டு அவனுக்குச் செய்ய வேண்டிய இதர பரிசோதனைக்காக எடுத்துக் கொண்டு போனார்கள். பிறகு என்னை பிரசவம் ஆன பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளும் அறைக்கு எடுத்துச் சென்றார்கள். என் கணவர் குழந்தையைப் பார்த்து விட்டு வந்து கர்பகாலத்துக்கு முன்னால் பிறந்த குழந்தை (“Premature baby”) எப்படி இருக்குமோ அவன் அப்படி இருப்பதாகவும், எல்லா பரிசோதனையும் நல்ல முடிவைத் தருவதாக மருத்துவர் சொன்னார் என்று கூறினார். அவனுடைய ஆப்கார் (“APGAR”) மதிப்பெண் ஒரு நிமிடத்திற்கு 7-ம், ஐந்து நிமிடங்களில் 9-ம் இருந்தது. ஆப்கார் என்பது ஒரு குழந்தையின் நிலைமை எப்படி இருக்கிறது என்று ஐந்து அடையாளங்களை வைத்து கண்டுபிடிப்பது. இது 7க்கு மேல் இருந்தால் நன்றாக இருக்கிறது என்று பொருள். குழந்தையை “Neo natal intensive care unit (NICU)”ல் வைத்து இருந்தார்கள். எனக்கு ஜுரம் இருந்ததால், ஜூரம் இறங்கியதும் குழந்தையைப் பார்க்க அனுமதிப்பதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் மாலை NICU-ன் தலைமை மருத்துவர் என்னை வந்து பார்த்தார். நான் கர்பமாக இருக்கும்போது ஏதாவது பிரச்சினை இருந்ததா என்று கேட்டார். நான் என்னுடைய 20-வது வாரத்தில் நடந்த சம்பவத்தைக் கூறினேன். உடனே, அவர் குழந்தையின் இருதயத்தில் முணுமுணுப்பு (“Murmur”) இருக்கிறது என்றும் குழந்தைக்கு “Echo cardiogram” எடுக்கவேண்டும் என்று கூறினார்.

குழந்தைக்கு “Echo cardiogram” செய்த இருதய மருத்துவர் (“Cardiologist”) குழந்தைக்கு “Double Outlet Right Ventricle (DORV) ”, “Severe Valvular Pulmanory Stenosis (PS) ”, “Large Ventricular Septal Defect (VSD)”, “Small Atrial Septal Defect (ASD)”, “Patent Ductus Arteriosus (PDA) ” என்ற ஐந்து குறைகள் இருப்பதாகச் சொன்னார். இவை ஒன்றுக்கு ஒன்று துணையாக இருந்ததால் குழந்தை நீலமாக மாறவில்லை என்றும் கூறினார். இதற்கு பெயர் “Pink Tetralogy of Fallot” என்று சொன்னார். குழந்தையின் இருதயம் தொடர்ந்து வளர்வதால், இன்னும் நான்கு வாரங்கள் கழித்து பார்த்துதான் எத்தனை குறைகள் இருக்கின்றன என்று நிச்சயமாகக் கூறமுடியும், என்றார். குழந்தை வளர்ந்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்.

இருதயத்தின் கீழ் பாகத்தில் வலது அறையிலிருந்து “Pulmonary artery” என்ற குழாயும், இடது அறையிலிருந்து “Aorta” என்ற குழாயும் கிளம்புகின்றன. DORV என்ற குறைபாட்டில் இரண்டும் வலது அறையிலிருந்து கிளம்புகின்றன. Valvular PS என்பது “Pulmonary valve”-ன் அடைப்பு. “VSD” என்பது இருதயத்தின் கீழ் பாகத்தில் உள்ள அறைகளைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை. இது எங்கள் குழந்தைக்கு கீழ் பாகத்தின் மேலே பெரிய அளவில் இருந்தது. “ASD” என்பது இருதயத்தின் மேல் பாகத்தைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது நுரையீரலை உபயோகிக்காது. அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பிராணவாயு கலந்த இரத்தம் செல்லும். அதற்காக “Pulmonary artery” மற்றும் “Aorta” - க்கு நடுவே ஒரு வழி “Ductus arteriosus” திறந்து இருக்கும். குழந்தை பிறந்து சுவாசிக்க ஆரம்பித்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்குள் அந்த வழி மூடிவிடும். இருதய மருத்துவர் சொன்னவை குழந்தை வயிற்றில் இருக்கும்போது சொன்ன “Tetralogy of Fallot” குறைகள் போலவே இருந்தன.

மறுநாள் ஜூரம் குறைந்ததும் குழந்தையைப் பார்க்கப் போனேன். குழந்தையை ஒரு திறந்த சின்ன கட்டிலில் வைத்து இருந்தார்கள். அவன் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பில் நிறைய குழாய்கள் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை சிறிய உருவத்தில் இத்தனை குழாய்களா என்று மனதில் கலக்கம் மற்றும் அவனை முதன்முறையாகப் பார்க்கும் மகிழ்ச்சி, என்று மாறி மாறி வந்தது. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் சுற்றி இருந்த இயந்திரங்களைப் பற்றி சொன்னார். அவன் மிகவும் சீரான நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்தார். என்னுடைய பாலை சாப்பிடாததனால் அதைப் குளிர் சாதனத்தில் பதனப் படுத்தி அவன் சாப்பிட ஆரம்பித்ததும் குடுப்போம் என்றார். இரத்த பரிசோதனைக்காகவும் மற்றும் ஒருவித மஞ்சள் நிறமான உணவு (“Hyperalimentation”) ஏற்ற IV-யும், பிராணவாயு சுவாசிக்க மூக்கில் குழாயும், மஞ்சள் காமாலை இறங்க “Photo therapy” க்காக அவன் தலைக்கு மேல் விளக்கு வைத்து இருந்தார்கள். அவனுடைய இருதயத் துடிப்பு, சுவாசிக்கும் முறை, மற்றும் இரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவைக் கண்காணிக்க “Pulse oximeter”, “Apnea monitor” போன்ற கருவிகள் வைத்து இருந்தார்கள். அவனைப் போலவே பத்து குழந்தைகள் அந்த அறையில் இருந்தார்கள். குழந்தை பிறந்த நான்காவது நாள், என்னுடைய உடல்நிலை சரியாக இருந்ததால் என்னை மருத்துவமனையிலிருந்து விடுவித்து விட்டார்கள். வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் குழந்தையைப் பார்க்கச் சென்றேன் அவனை விட்டு விட்டு போகிறோமே என்று அழுகை வந்தது. அவனைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ், எந்த நேரத்திலும் குழந்தையைப் பார்க்கலாம், மற்றும் எந்த நேரத்திலும் தொலைபேசியின் மூலமாக குழந்தையின் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று சொன்னார்.

தினமும் என் கணவருடன் குழந்தையைப் பார்க்கச் செல்வேன். அவனுக்கு அருகில் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்வோம். ஒவ்வொரு நாளும் குழந்தை முன்னேற்றம் காண்பித்தான். அவன் உடம்பில் சொறுகியிருக்கும் குழாய்களைப் பிடித்து இழுப்பான். அதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும், ஆனால் அதே சமயத்தில் அவன் வலுவடைந்து வருகிறான் என்று மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தையின் இரண்டாவது வாரத்திலிருந்து அவனுக்கு துடைத்து விடவும், மற்றும் மடியில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன். பிறந்து இரண்டாவது வாரத்தில், வாயில் குழாய் வழியாக அம்மா பாலைச் செலுத்தினார்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லிலிட்டர் என்று செலுத்தினார்கள், மேலும் தொடர்ந்து சுவாசிப்பதற்காக வைத்திருந்த CPAP (Continuous Positive Airway Pressure) குழாயை சிறிய குழாயாக ("Nasal canula") மாற்றினார்கள். தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லிலிட்டர் பாலைக் கூட்டினார்கள். குழந்தைக்கு "Apnea of Prematurity" இருந்ததால் அவனுக்கு "Caffeine” கொடுத்தார்கள். குழந்தைக்கு சிவப்பு இரத்த அணுக்கள் அதிகம் சுரக்கவில்லையென்றால் இரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும் என்றும், அப்பாவிடமிருந்து இரத்தம் எடுத்து பரிசோதனை செய்து எல்லாம் சரியாக இருந்தால், அதே இரத்தத்தைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் என் கணவர் இந்தியா போய்விட்டு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகாததால், அவருடைய இரத்தத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குச் சில "Viral infection" இருப்பதால் இந்த முடிவுக்குக் காரணம்.

பிறந்து 3-வது வாரத்தில் குழந்தையுடைய நிறம் கொஞ்சம் வெளிர் நிறமாக மாறியது, இரத்தத்தில் உள்ள பிராணவாயுவின் அளவு குறைந்து, அவனுடைய மூச்சு மற்றும் இருதயத்துடிப்பு சீராக இல்லாததால் அவனுக்கு இரத்த வங்கியிலிருந்து (“Blood bank”) கொண்டு வந்த இரத்தம் ஏற்றினார்கள். பிறகு குழந்தைக்கு ஒரு மாதம் இருக்கும்போது அவனுக்குச் ஜூரம் வந்ததால் "Lumbar test" செய்தார்கள். முதுகுத் தண்டுவடத்தின் அடியில் ஒரு ஊசியைக் குத்தி அதிலிருந்து எடுக்கும் திரவியத்தைப் பரிசோதித்து பார்த்தார்கள். எந்த ஒரு “Bacterial infection”-ம் இல்லை என்று வந்தது. "Antibiotics" கொடுத்தார்கள், மேலும் இரத்தம் ஏற்றினார்கள். இந்த ஜூரத்தால் குழந்தையின் எடை கொஞ்சம் இறங்கியது. அவனுடைய உணவை, அவனது எடையை கொண்டு கணக்கிடுவார்கள் (1000 கிராம்கள் எடைக்கு, 20 மில்லிலிட்டர்/நாள்). ஜூரம் இறங்கியதும் மறுபடியும் உணவை ஏற்றினார்கள். பிறகு புட்டியில் பாலைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். குழந்தைக்கு "உறிந்து, பாலை விழுங்கி, மூச்சு விடுவதற்குத் (Suck, Swallow, Breathe)" தெரியாததால் அவனுடைய பிராணவாயு அளவு (O2 Saturation) இரத்தத்தில் குறைந்து விடும், சில சமயம் 40-50% மட்டுமே இருக்கும். அதனால் அவனுக்கு பிராணவாயுவை பால் குடிக்கும் போது மட்டும் கொடுத்தார்கள். நானும் சிறிது நாட்களில் பால் கொடுக்க ஆரம்பிதேன். அவனுக்கு இருதய கோளாறும் இருந்ததால் குழந்தைக்கு பால் குடுக்கும்போது நிறம் மாறினால் புட்டியை வெளியில் எடுக்க சொல்லிக் கொடுத்தார்கள்.

பிறந்த 5-வது வாரத்தில் NICU-விலிருந்து, Special care unit-க்கு மாற்றினார்கள். பிறந்து 6-வது வாரத்தில் அவனுக்கு ஆசனவாயில் இருந்த ஒரு பெரிய வெடிப்பில் இருந்து இரத்தம் வந்தது. அது பால் ஒத்துக் கொள்ளாததனால் (“Milk protein allergy”) என்று ஒரு மருத்துவர் எண்ணினார், ஆனால் அது தானாகச் சரியாகியது. அவனை வீட்டிற்கு அழைத்து போவதற்கு முன்னால் "கார் சீட் பரிசோதனை" (குழந்தையை கார் சீட்டில் வைத்து, கார் ஒடும் சூழ்நிலையை ஒரு கருவி உருவாக்க, குழந்தையின் சுவாசத்தையும், இருதயத் துடிப்பையும் கண்காணிப்பது), "4 channel PCG" பரிசோதனை செய்தார்கள். இதில் 24-மணி நேரம் குழந்தையைக் கண்காணிப்பார்கள். இதில் குழந்தையின் சுவாசம், மற்றும் இருதயத் துடிப்பைக் கணிப்பொறியில் பதிவு செய்வார்கள். முதல் பரிசோதனையில் குழந்தைக்கு “Apnea” இன்னும் இருப்பது தெரிய வந்தது, அதனால் நடுவில் நிறுத்தியிருந்த "Caffeine"-ஐ மறுபடியும் கொடுக்கச் சொன்னார்கள் இரண்டாவது முறை பரிசோதனை செய்து பார்த்த பிறகு, குழந்தையை வீட்டிற்கு "Apnea monitor", "Pulse oximeter" மற்றும் "Oxygen cylinder" இதனுடன் அனுப்பினார்கள்.

இத்தனைக் கருவிகளுடன் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வது பயமாக இருந்தாலும், அவன் வீட்டிற்கு வந்ததும் எங்களுக்கு மிகவும் மகிழ்சியாக இருந்தது. "Apnea monitor" 24 மணி நேரம் அவனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவனது மார்பில் ஒரு பட்டையைக் கட்டி அந்த கருவியுடன் இணைத்தே வைத்திருப்போம். அந்தக் கருவி, நாம் தோளில் மாட்டிக் கொள்ளும்படி இருந்தது. "Pulse oximeter" மற்றும் "Oxygen cylinder" அவனுக்கு பால் கொடுக்கும்போது மட்டும் உபயோகப் படுத்தினோம். அத்தனை கருவிகளும் ஏற்படுத்தும் ஓசை முதலில் கலக்கத்தை உண்டு செய்தாலும், சிறிது நாட்களில் அந்த கலக்கம் குறைந்து. நம்மைத் தவிர குழந்தையைக் கண்காணிக்கத் துணையாக கருவிகள் இருப்பது பயத்தைத் தெளிய வைத்தது. குழந்தை முகம் பார்த்து சிரிக்கும்போது எல்லா கவலையும் பறந்து போனது. அவனுடைய அன்றாட விளையாட்டில் மனதைச் செலுத்தினோம். வாரம் ஒரு முறை குழந்தை மருத்துவரிடமும், மாதம் ஒரு முறை இருதய மருத்துவரிடமும்,
மாதம் ஒரு முறை அவனுடைய சுவாசிக்கும் முறையைக் கண்காணிக்க "Apnea" பரிசோதனை நிலையத்திற்கும் சென்றோம்.

அவன் வீட்டிற்கு வந்த ஒரு மாதத்தில் அவனுக்குத் திடீர் என்று ஒரு நாள் 102º F (38.89º C) காய்ச்சல் வந்தது. அவனுடைய மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். காய்ச்சலோடு சேர்ந்து சளியோ, இருமலோ இல்லாததால் அவர் அவனை மருத்துவமனையில் சேர்க்கும்படி சொன்னார். மருத்துவமனையில் அவனுக்கு “Lumbar test”, “Echo cardiogram”, சிறுநீர் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்தார்கள். பிறகு அவனுக்கு “Urinary tract infection” இருப்பது தெரிய வந்தது. அவனுடைய சிறுநீரகத்தை “Ultrasound” மூலம் பார்த்தார்கள், அப்பொழுது வலது பக்க சிறுநீரகத்தில் வீக்கம் இருப்பது தெரிய வந்தது, இதை "Hydronephrosis" என்றார்கள். ஐந்து நாட்களில் அவனுக்கு காய்ச்சல் குறைந்த பிறகு அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். மூன்று வாரத்திற்கு பிறகு அவனுக்கு “Voiding cystourethrogram-VCUG test” செய்தார்கள். “VCUG” பரிசோதனையில் ஒரு சிறிய குழாயைச் ("Catheter") சிறுநீர் கழிக்கும் இடம் ("Urethra") வழியாகச் சொறுகி, அதன் வழியாக “Iodine solution”-ஐ, சிறுநீரகப் பைக்கு ("Urinary bladder") செலுத்தினார்கள். பிறகு குழந்தை சிறுநீர் கழிக்கும் போது X-Ray எடுத்தார்கள். அவனுடைய "Urologist" (இவர் சிறுநீரக சம்பந்தமான பிரிவில் தேர்ச்சி பெற்றவர்)அவனுக்கு வலது பக்க சிறுநீரகத்தில் “Reflux 3” இருப்பதகவும், இடது பக்க சிறுநீரகத்தில் “Reflux 1” இருப்பதாகவும் கூறினார். "Urinary bladder"-லிருந்து வெளியேறும் சிறுநீர், மறுபடியும் சிறுநீரகத்துக்கு வருவது "reflux" . எனப்படும். திரும்பிச் செல்லும் சிறுநீர், சிறுநீரகத்துக்குச் சென்றால் ஐந்து என்றும் (இது மிகவும் அதிகம்), சிறிது தூரம் மட்டுமே சென்றால் ஒன்று என்றும் "reflux" வரிசைப்படுத்தப் படுகிறது. இதன் தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறு படுகிறது. என்னுடைய குழந்தைக்கு ஒரு வருடம் "Bactrim" என்ற “Antibiotics” கொடுத்துவிட்டு, மறுபடியும், “Ultrasound” மற்றும் "Nuclear Cystogram" செய்வார்கள். " Nuclear Cystogram "-ம் VCUG-யைப் போன்றதே. இதில் குழந்தைக்கு "Iodine Solution" க்கு பதிலாக உப்பு நீரை "Saline Solution" , “Technetium” என்ற பொருளோடு செலுத்துவார்கள். இந்த குறை 70 சதவிகிதம் குழந்தைகளுக்குத் தானே சரியாகிவிடும். இல்லை என்றால் “Deflux” ஊசி போடுவார்கள். இதை ஒரு தடவை போடுவார்கள் என்று நினைக்கிறேன். இருதய குறைபாடுகளுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு சிறுநீரகம் சம்பந்தமான கோளாறுகளும் வருகின்றன. இரண்டு உறுப்புகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவாவவதால் இது போல இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, November 16, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 1

இந்தத் தொடர் இப்போது ஒரு வயது மூன்று மாதம் ஆகும், என்னுடைய இரண்டாவது குழந்தையை நான் கர்பமாய் இருந்தபோதும், மற்றும் அவன் பிறந்த பிறகு நடந்த சம்பவங்களின் தொகுப்பு. இந்த தொடர் மொத்தம் நான்கு பாகங்களைக் கொண்டது. என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட சில விஷயங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்பதற்காக இந்தத் தொடரை நான் எழுதுகிறேன். நான் கர்பமாய் இருந்த சமயத்தில், இருபதாவது வாரத்தில் செய்த “Ultra-sound” (ஒலி அலைகளைக் கொண்டு உறுப்புகளைப் பார்க்கும் கருவி) பரிசோதனையில் குழந்தைக்கு இருதயத்தில் சில குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது. விபரங்களுக்காக வலைத்தளத்தில் தேடியபோது கிடைத்த விஷயங்கள் பல மிகவும் அறிவியல் பூர்வமாகவோ அல்லது மனதை வருத்தமடையச் செய்வதாகவோ இருந்தன. என்னுடைய அனுபவங்களை எழுதுவதன் மூலம் என் போன்ற நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறேன்.

நான் இரண்டாவது குழந்தையை உண்டானபோது, என்னுடைய மகளுக்கு ஒன்றரை வயது. முதல் எட்டு வாரங்கள் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. பிறகு எட்டாவது வாரம் வழக்கமாக செய்யும் பரிசோதனையில், இரட்டைக் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. “ஒரு இருதயத் துடிப்பு இருக்கிறது, இன்னொரு கரு வளர்ச்சி அடையுமா என்று இரண்டு வாரம் கழித்துதான் சொல்ல முடியும்” என்று மருத்துவர் சொன்னார். பிறகு பத்தாவது வாரத்தில் இன்னொரு கரு வளரவில்லை , அது “மறைந்துவிடும் இரட்டை குழந்தை” (“Vanishing twin” ) என்று தெரியவந்தது.

மூன்றாவது மாதத்தில் எனக்கு இடுப்பில் ஆரம்பித்து பாதம் வரை கடுமையான வலி வந்தது. வலி குறையாததால் பத்து நாட்களுக்குப் பிறகு மருத்துவரைப் பார்த்தேன். எனக்கு வயது அதிகம் ஆகாததால் மூட்டு வலியாக (“Arthritis”) இருக்காது என்றும், சில கர்பிணி பெண்களுக்கு வரும் “Sciatica” வலியாக இருக்கும் என்றார். “Sciatica” என்பது குழந்தை “Sciatic” நரம்பு மீது அமுக்குவதால் உண்டாகும் நரம்பு வலி, குழந்தை நகர்ந்தால் வலி போக வாய்ப்பு உள்ளது. நாளடைவில் வலி அதிகம் ஆகியது, கம்பு வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் என்னுடைய அம்மா எனக்கு உதவியாக இருந்தார். ஒரு காரியம் நிமித்தமாக அவர் ஜூன் மாதம் இந்தியா திரும்பிச் சென்றார்.

பதினெட்டாவது வாரம் “Ultrasound” பரிசோதனையின் போது, ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தது. மேலும், இருதயத்தில் உள்ள நான்கு அறைகள் (“Heart chambers”) முழுமையாகத் தெரியவில்லை. “குழந்தைப் படுத்திருக்கும் விதத்தைப் பொருத்து முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்” என்று மருத்துவர் சொன்னார். இந்த மருத்துவர் “Perinatal ultrasound” நிபுணர். முதல் பரிசோதனையின் முடிவு சரியாகத் தெரியாததால் மறுபடியும் பரிசோதனைக்காக அடுத்த வாரம் சென்றேன். அப்பொழுது இருதயத்தில் உள்ள நான்கு அறைகள் சரியாகத் தெரிவதாகவும், இரத்தம் வெளியேறும் குழாய்கள் (“Exit vessels”) சரியாகத் தெரியவில்லை, அதனால் திரும்ப வரும்படி கூறினார்.

பிறகு 20-வது வாரத்தில் மறுபடியும் சென்றேன், மருத்துவர் ஒரு மணி நேரம் குழந்தையின் இருதயம் தெளிவாகத் தெரிகிறதா என்று பார்த்தார், பின்னர் மற்ற இரண்டு வாரங்களில் செய்ததுபோல், சிறிது நேரம் கழித்து மறுபடியும் பார்க்கலாம் என்றார். இப்படி பல தடவைப் பார்த்த பிறகு என் குழந்தைக்கு "Tetralogy of fallot" என்று சொல்லப்படும் இருதயக் கோளாறு இருப்பதாகவும், "Amniocentesis" செய்யவேண்டும் என்றும் சொன்னார். “Aminocentesis” என்பது “Ultrasound” மூலமாக குழந்தையின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே, ஒரு ஊசியை கர்பிணியின் வயிற்றுக்குள் சொறுகி, கர்பப் பையிலிருந்து கொஞ்சம் நீரை எடுக்கும் முறையின் பெயர். “அந்த நீரைப் பரிசோதித்து "Chromosome" பிரச்சனையாக இருக்குமா என்று பார்க்க வேண்டும், அது போல் இல்லையென்றால் குழந்தை பிறந்தவுடன் இருதய அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம்”, என்று மருத்துவர் கூறினார். இருதய கோளாறு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்த, சிறந்த மருத்துவமனையில் "Fetal echocardiogram" (இதுவும் “Ultrasound” போலவே ஒலி அலைகளைக் கொண்டு குழந்தையின் உறுப்புகளைப் பார்க்க கூடிய கருவி, ஆனால் அதைவிட துல்லியமாக காட்டக் கூடியது) செய்து பார்க்க வேண்டும் என்றார். அங்கேயே உடனே “Amniocentesis” செய்தார். பரிசோதனையின் முடிவு தெரிய இரண்டு வாரங்கள் ஆகும் என்றார், முதல் மூன்று நாட்களுக்குள், “Trisomy-21, down’s syndrome” இல்லை என்று தெரிந்து விட்டால் பெரும்பாலும் இரண்டு வாரம் கழித்து தெரியும் முடிவும் நல்லதாகவே இருக்கும் என்றார். “Trisomy-21, down’s syndrome” என்பது மூளை, மற்றும் உடல் வளர்ச்சி குன்றும் நோய், இதில் குழந்தைக்கு 21-வது Chromosome ஜோடி, இரண்டு இருக்கும். “Amniocentesis” செய்ததால் கர்பப்பை குழந்தை பிறக்கும் தருவாயில் சுறுங்கி விரிவது போல் செய்ய ஆரம்பித்துவிடும், அதனால் அதிகமான பளு தூக்காமல் ஒரு வாரம் கவனமாக இருக்கும்படி சொன்னார்.

வீட்டிற்குள் வரும்போது வயிற்றில் அதிகமான வலி எடுக்க ஆரம்பித்தது. இந்த சமயத்தில் என் கணவர் என் மகளையும் என்னையும் கவனித்துக் கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து வலி குறைந்ததும், வலைதளத்தில் கர்பத்தில் வளரும் குழந்தைக்கு இருக்கும் இருதய கோளாறு பற்றி படித்தேன். குழந்தை உருவாகி பன்னிரண்டு வாரங்களில், குழந்தை பிறக்கும்போது எப்படி இருக்குமோ அப்படி இருதயமும், மூளையும் வளர்ச்சி அடைந்துவிடுகின்றன. இருபதாவது வாரத்தில் செய்யும் "Ultrasound"-ன் முடிவுகள் நம்பத்தகுந்தவை. குழந்தை படுத்திருக்கும் பக்கம் சில சமயம் படம் எடுப்பதற்கு உகந்ததாக இல்லையென்றால் ஒரு வேளை தப்பான முடிவு வந்திருக்கலாம். "Fetal echocardiogram" இன்னும் தெளிவான முடிவைத் தரும்.

இருதயத்தில் கோளாறு, உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் 1000-ல் 8 (0.8%) குழந்தைக்கு உள்ளது. என் குழந்தைக்கு இருப்பதாகச் சொன்னது “Tetralogy of fallot". "Tetralogy of Fallot" என்பது நான்கு குறைகள் இருதயத்தில் உள்ளதை குறிப்பது. இருதயத்தின் கீழ் அறைகளைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை ("Ventricular septal defect - VSD"), "Pulmonary valve"-ல் உள்ள அடைப்பு ("Pulmonary stenosis- PS"), கீழ் அறைகளில் உள்ள வலப்பக்க அறை ("Right Ventrcile") தடித்துப் போதல் ("RV Hypertrophy), "Aorta" என்ற இருதயத்திலிருந்து உடலுக்கு இரத்தத்தை அனுப்பும் குழாய் இடம் மாறி இருத்தல் ("Overriding aorta"). இதைப் பற்றி விவரமாகப் படிக்க http://www.chdinfo.com/chdarticles/tof1.htm மற்றும் http://www.heartpoint.com/congtetralogy.html செல்லவும். இவர்களுடைய வலைத்தளங்கள் நிலைமையின் வீரியத்தைப் புரிய வைத்தது. மேலும் பல பெற்றோர்களின் கதைகள் மனத்தை உருக்கியது. இருதய சிகிச்சை பெற்று நல்ல நிலமையில் இருக்கும் குழந்தையின் கதை கிடைக்கவில்லை ஆதலால், துயரம் அதிகமானது. 21-வது வாரம் நானும் என் கணவரும் “Children’s Hospital Philadelphia” மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே “fetal echocardiogram” செய்துவிட்டு குழந்தைக்கு ஒரு குறையும் இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்கள்.

நல்ல வேளையாக உதவிக்காக எட்டாம் மாதத்தில் வருவதாக இருந்த என் மாமனாரும், மாமியாரும் ஆறாம் மாதத்தில் வந்தார்கள். 29-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து “St. Peters University Hospital” - ல் சேர்க்கப்பட்டேன். இந்த மருத்தவமனை கர்ப காலம் முடிவடைவதற்கு முன்னால் பிறக்கும் குழந்தையின் கவனிப்பில் சிறந்தது. இந்த மருத்துவமனையைப் பற்றிய விவரம் அறிய http://www.saintpetersuh.com/index.asp வலைதளத்திற்குச் செல்லவும். அந்த மருத்துவமனையில் என்னைப் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, பிரசவ வலியை கட்டுப் படுத்த ஊசி போட்டார்கள். பிறகு, குழந்தையின் நுரையீரல் வளர “Steroids” (Betamethasone, Dexamethasone) போட்டார்கள். “Steroids” போட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு தானாக குழந்தை வெளிவருவதை தடுக்க கூடாது என்பதால், வலியை நிறுத்தும் மருந்தை நிறுத்தினார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 27, 2005

குழந்தைப் பாடல்கள் - 9

ஆங்கிலப் பாடலின் தமிழாக்கம். அதே ராகம், தாளத்தோடு பாடலாம்.

காகிதத் துண்டுகள், காகிதத் துண்டுகள்
தரையிலே பார்; தரையிலே பார்
அசுத்தப் படுத்துதே; அசுத்தப் படுத்துதே
பொறுக்கியெடு! பொறுக்கியெடு!

மூலம்:
Bits of Paper Bits of Paper
Lying on the floor; lying on the floor
Makes the place untidy; makes the place untidy
Pick them up! Pick them up!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 21, 2005

குழந்தைப் பாடல்கள் - 8

சிறு வயதில் வானொலியில் கேட்ட பாடல் இது!

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்

காக்கா மூக்கில வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்

காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்காபாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்

விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம்

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 30, 2005

Ball விளையாடுவோம் வாரீர்

நாட்டுப்புறப் பாடல்கள் – 7

இது ஒரு தங்கிலீஷ் பாடல்! கல்யாண்ங்களில் (நலுங்கு) பாடப்படுவது உண்டு. சற்று வித்தியாசமானது.

Ball விளையாடுவோம் வாரீர்

Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

பச்சை, white, rose, brown, black, red, rose , கலரினில்
கால்கள் அழகாய் நிறைந்த பந்தலில் நாமும்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Uncle, father, brother, அந்த friend-உடனே
அந்தரங்கமுடன் அவரையும் அழைத்து
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Hand-ஆல் Ball-ஐ அதி வேகமாய் எடுப்போம்
யார் ஜெயிப்பார் என்று அப்புறம் பார்ப்போம்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

நீர் ஜெயித்தால் நான் Thank You என்பேன்
நான் ஜெயித்தால் என்னை அன்புடன் பாரும்
Ball விளையாடுவோம் வாரீர் - ஆனந்தமாகவே
Ball விளையாடுவோம் வாரீர் - உல்லாசமாகவே
Ball விளையாடுவோம் வாரீர்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

நாட்டுப்புறப் பாடல்கள் - 6

இது திரைப்படப் பாடலா என்று தெரியாது. என் மாமியார் பாடிக் கேட்டிருக்கிறேன்.

A Bயும் C Dயும் உள்ள தொரேடீ
பெண்ணே நல்ல தொரேடீ

இத்துனூண்டு இட்டலி விலை அரையணாவாண்டீ
ஆறு இட்டலி தின்னாக்கூட வயத்துக்குப் பத்தலடீ

(A Bயும் C Dயும்)

குட்டிக்குரா பவுடர் விலை ஏறிப்போச்சேடி
ஆகையால அரிசிமாவ அள்ளிப் பூசேண்டி

(A Bயும் C Dயும்)

சக்கரைக்கு ரேஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால காப்பிக்குக்கூட சக்கரை பத்தலடீ

(A Bயும் C Dயும்)

அரிசிக்கு ரேஷன் கார்டு கொடுத்துவிட்டாண்டீ
ஆகையால விருந்தாளி வந்தால் போகச் சொல்லேண்டி

(A Bயும் C Dயும்)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.