Wednesday, November 16, 2005

கண்ணன் வந்தான் - பாகம் 1

இந்தத் தொடர் இப்போது ஒரு வயது மூன்று மாதம் ஆகும், என்னுடைய இரண்டாவது குழந்தையை நான் கர்பமாய் இருந்தபோதும், மற்றும் அவன் பிறந்த பிறகு நடந்த சம்பவங்களின் தொகுப்பு. இந்த தொடர் மொத்தம் நான்கு பாகங்களைக் கொண்டது. என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட சில விஷயங்கள் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கட்டும் என்பதற்காக இந்தத் தொடரை நான் எழுதுகிறேன். நான் கர்பமாய் இருந்த சமயத்தில், இருபதாவது வாரத்தில் செய்த “Ultra-sound” (ஒலி அலைகளைக் கொண்டு உறுப்புகளைப் பார்க்கும் கருவி) பரிசோதனையில் குழந்தைக்கு இருதயத்தில் சில குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது. விபரங்களுக்காக வலைத்தளத்தில் தேடியபோது கிடைத்த விஷயங்கள் பல மிகவும் அறிவியல் பூர்வமாகவோ அல்லது மனதை வருத்தமடையச் செய்வதாகவோ இருந்தன. என்னுடைய அனுபவங்களை எழுதுவதன் மூலம் என் போன்ற நிலையில் உள்ள பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறேன்.

நான் இரண்டாவது குழந்தையை உண்டானபோது, என்னுடைய மகளுக்கு ஒன்றரை வயது. முதல் எட்டு வாரங்கள் மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. பிறகு எட்டாவது வாரம் வழக்கமாக செய்யும் பரிசோதனையில், இரட்டைக் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. “ஒரு இருதயத் துடிப்பு இருக்கிறது, இன்னொரு கரு வளர்ச்சி அடையுமா என்று இரண்டு வாரம் கழித்துதான் சொல்ல முடியும்” என்று மருத்துவர் சொன்னார். பிறகு பத்தாவது வாரத்தில் இன்னொரு கரு வளரவில்லை , அது “மறைந்துவிடும் இரட்டை குழந்தை” (“Vanishing twin” ) என்று தெரியவந்தது.

மூன்றாவது மாதத்தில் எனக்கு இடுப்பில் ஆரம்பித்து பாதம் வரை கடுமையான வலி வந்தது. வலி குறையாததால் பத்து நாட்களுக்குப் பிறகு மருத்துவரைப் பார்த்தேன். எனக்கு வயது அதிகம் ஆகாததால் மூட்டு வலியாக (“Arthritis”) இருக்காது என்றும், சில கர்பிணி பெண்களுக்கு வரும் “Sciatica” வலியாக இருக்கும் என்றார். “Sciatica” என்பது குழந்தை “Sciatic” நரம்பு மீது அமுக்குவதால் உண்டாகும் நரம்பு வலி, குழந்தை நகர்ந்தால் வலி போக வாய்ப்பு உள்ளது. நாளடைவில் வலி அதிகம் ஆகியது, கம்பு வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். இந்த சமயத்தில் என்னுடைய அம்மா எனக்கு உதவியாக இருந்தார். ஒரு காரியம் நிமித்தமாக அவர் ஜூன் மாதம் இந்தியா திரும்பிச் சென்றார்.

பதினெட்டாவது வாரம் “Ultrasound” பரிசோதனையின் போது, ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தது. மேலும், இருதயத்தில் உள்ள நான்கு அறைகள் (“Heart chambers”) முழுமையாகத் தெரியவில்லை. “குழந்தைப் படுத்திருக்கும் விதத்தைப் பொருத்து முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம்” என்று மருத்துவர் சொன்னார். இந்த மருத்துவர் “Perinatal ultrasound” நிபுணர். முதல் பரிசோதனையின் முடிவு சரியாகத் தெரியாததால் மறுபடியும் பரிசோதனைக்காக அடுத்த வாரம் சென்றேன். அப்பொழுது இருதயத்தில் உள்ள நான்கு அறைகள் சரியாகத் தெரிவதாகவும், இரத்தம் வெளியேறும் குழாய்கள் (“Exit vessels”) சரியாகத் தெரியவில்லை, அதனால் திரும்ப வரும்படி கூறினார்.

பிறகு 20-வது வாரத்தில் மறுபடியும் சென்றேன், மருத்துவர் ஒரு மணி நேரம் குழந்தையின் இருதயம் தெளிவாகத் தெரிகிறதா என்று பார்த்தார், பின்னர் மற்ற இரண்டு வாரங்களில் செய்ததுபோல், சிறிது நேரம் கழித்து மறுபடியும் பார்க்கலாம் என்றார். இப்படி பல தடவைப் பார்த்த பிறகு என் குழந்தைக்கு "Tetralogy of fallot" என்று சொல்லப்படும் இருதயக் கோளாறு இருப்பதாகவும், "Amniocentesis" செய்யவேண்டும் என்றும் சொன்னார். “Aminocentesis” என்பது “Ultrasound” மூலமாக குழந்தையின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே, ஒரு ஊசியை கர்பிணியின் வயிற்றுக்குள் சொறுகி, கர்பப் பையிலிருந்து கொஞ்சம் நீரை எடுக்கும் முறையின் பெயர். “அந்த நீரைப் பரிசோதித்து "Chromosome" பிரச்சனையாக இருக்குமா என்று பார்க்க வேண்டும், அது போல் இல்லையென்றால் குழந்தை பிறந்தவுடன் இருதய அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம்”, என்று மருத்துவர் கூறினார். இருதய கோளாறு இருக்கிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்த, சிறந்த மருத்துவமனையில் "Fetal echocardiogram" (இதுவும் “Ultrasound” போலவே ஒலி அலைகளைக் கொண்டு குழந்தையின் உறுப்புகளைப் பார்க்க கூடிய கருவி, ஆனால் அதைவிட துல்லியமாக காட்டக் கூடியது) செய்து பார்க்க வேண்டும் என்றார். அங்கேயே உடனே “Amniocentesis” செய்தார். பரிசோதனையின் முடிவு தெரிய இரண்டு வாரங்கள் ஆகும் என்றார், முதல் மூன்று நாட்களுக்குள், “Trisomy-21, down’s syndrome” இல்லை என்று தெரிந்து விட்டால் பெரும்பாலும் இரண்டு வாரம் கழித்து தெரியும் முடிவும் நல்லதாகவே இருக்கும் என்றார். “Trisomy-21, down’s syndrome” என்பது மூளை, மற்றும் உடல் வளர்ச்சி குன்றும் நோய், இதில் குழந்தைக்கு 21-வது Chromosome ஜோடி, இரண்டு இருக்கும். “Amniocentesis” செய்ததால் கர்பப்பை குழந்தை பிறக்கும் தருவாயில் சுறுங்கி விரிவது போல் செய்ய ஆரம்பித்துவிடும், அதனால் அதிகமான பளு தூக்காமல் ஒரு வாரம் கவனமாக இருக்கும்படி சொன்னார்.

வீட்டிற்குள் வரும்போது வயிற்றில் அதிகமான வலி எடுக்க ஆரம்பித்தது. இந்த சமயத்தில் என் கணவர் என் மகளையும் என்னையும் கவனித்துக் கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து வலி குறைந்ததும், வலைதளத்தில் கர்பத்தில் வளரும் குழந்தைக்கு இருக்கும் இருதய கோளாறு பற்றி படித்தேன். குழந்தை உருவாகி பன்னிரண்டு வாரங்களில், குழந்தை பிறக்கும்போது எப்படி இருக்குமோ அப்படி இருதயமும், மூளையும் வளர்ச்சி அடைந்துவிடுகின்றன. இருபதாவது வாரத்தில் செய்யும் "Ultrasound"-ன் முடிவுகள் நம்பத்தகுந்தவை. குழந்தை படுத்திருக்கும் பக்கம் சில சமயம் படம் எடுப்பதற்கு உகந்ததாக இல்லையென்றால் ஒரு வேளை தப்பான முடிவு வந்திருக்கலாம். "Fetal echocardiogram" இன்னும் தெளிவான முடிவைத் தரும்.

இருதயத்தில் கோளாறு, உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் 1000-ல் 8 (0.8%) குழந்தைக்கு உள்ளது. என் குழந்தைக்கு இருப்பதாகச் சொன்னது “Tetralogy of fallot". "Tetralogy of Fallot" என்பது நான்கு குறைகள் இருதயத்தில் உள்ளதை குறிப்பது. இருதயத்தின் கீழ் அறைகளைப் பிரிக்கும் சுவரில் உள்ள ஓட்டை ("Ventricular septal defect - VSD"), "Pulmonary valve"-ல் உள்ள அடைப்பு ("Pulmonary stenosis- PS"), கீழ் அறைகளில் உள்ள வலப்பக்க அறை ("Right Ventrcile") தடித்துப் போதல் ("RV Hypertrophy), "Aorta" என்ற இருதயத்திலிருந்து உடலுக்கு இரத்தத்தை அனுப்பும் குழாய் இடம் மாறி இருத்தல் ("Overriding aorta"). இதைப் பற்றி விவரமாகப் படிக்க http://www.chdinfo.com/chdarticles/tof1.htm மற்றும் http://www.heartpoint.com/congtetralogy.html செல்லவும். இவர்களுடைய வலைத்தளங்கள் நிலைமையின் வீரியத்தைப் புரிய வைத்தது. மேலும் பல பெற்றோர்களின் கதைகள் மனத்தை உருக்கியது. இருதய சிகிச்சை பெற்று நல்ல நிலமையில் இருக்கும் குழந்தையின் கதை கிடைக்கவில்லை ஆதலால், துயரம் அதிகமானது. 21-வது வாரம் நானும் என் கணவரும் “Children’s Hospital Philadelphia” மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே “fetal echocardiogram” செய்துவிட்டு குழந்தைக்கு ஒரு குறையும் இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்கள்.

நல்ல வேளையாக உதவிக்காக எட்டாம் மாதத்தில் வருவதாக இருந்த என் மாமனாரும், மாமியாரும் ஆறாம் மாதத்தில் வந்தார்கள். 29-வது வாரத்தில் பனிக்குடம் உடைந்து “St. Peters University Hospital” - ல் சேர்க்கப்பட்டேன். இந்த மருத்தவமனை கர்ப காலம் முடிவடைவதற்கு முன்னால் பிறக்கும் குழந்தையின் கவனிப்பில் சிறந்தது. இந்த மருத்துவமனையைப் பற்றிய விவரம் அறிய http://www.saintpetersuh.com/index.asp வலைதளத்திற்குச் செல்லவும். அந்த மருத்துவமனையில் என்னைப் பரிசோதனை செய்து பார்த்த பிறகு, பிரசவ வலியை கட்டுப் படுத்த ஊசி போட்டார்கள். பிறகு, குழந்தையின் நுரையீரல் வளர “Steroids” (Betamethasone, Dexamethasone) போட்டார்கள். “Steroids” போட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு தானாக குழந்தை வெளிவருவதை தடுக்க கூடாது என்பதால், வலியை நிறுத்தும் மருந்தை நிறுத்தினார்கள்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

Blogger Thangamani said...

பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

6:25 PM  
Blogger Nithya said...

Jay, I cannot read your tamil post as the characters all come as dashes. I have set the encoding to Unicode (UTF-8). I could read it in tamil in tamilmanam.com, but when I click on the link and come to your page, I can't read it. Please help. Thanks.

7:13 PM  
Blogger சிவா said...

ஒவ்வொரு பிரசவமும் பெண்களுக்கு மறு ஜென்மம் என்று சொல்வார்கள். அது 100 சதவிதம் உண்மை

7:18 PM  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மிகவும் அவசியமான தொடர். நன்றி ஜெயஸ்ரீ.

-மதி

8:08 PM  
Blogger பரஞ்சோதி said...

சகோதரி,

இந்த பதிவு நிறைய விசயங்களை தெரிந்துக் கொள்ள வைக்கிறது.

என் மகள் சக்தி உண்டான நாள் முதல் இப்போ ஒரு வயதை அடைய இருக்கும் நாள் வரை எங்களுக்கும் ஆயிரமாயிரம் அனுபவங்கள்.

இந்த பதிவுகள் முடிந்ததும், உங்க வீட்டு தேவதையையும், குட்டி கண்ணனையும் பற்றிய பதிவுகள் கொடுங்க.

8:44 PM  
Blogger அன்பு said...

மிக பயனுள்ள விடயங்கள், பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

9:01 PM  
Blogger b said...

பாதுகாக்க வேண்டிய பயனுள்ள தொடர்.

2:25 AM  
Blogger பத்மா அர்விந்த் said...

ஜெயஸ்ரீ
நீங்கள் நியுஜெர்ஸியில் இருக்கிறீர்களா? இருந்தால் தாய் சேய் நல குழுவில் பங்கு பெற விரும்புவீர்களா? நான் சில பொதுமக்களைன் பங்கை குறிப்பாக ஆசியர்களை தேடிக்கொண்டிருக்கிறேன். மாதம் ஒருமுரை சில மணி நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும். விருப்பம் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
St.Peters மருத்துவமனை பற்றி எனக்கு வேறுமாதிரியான கருத்து உண்டு.இது என் அனுபவம் ஒட்டியதல்ல, அறிவு சார்ந்த விஷயம்.
பிறகு எழுதுகிறேன்.
நல்ல தொடர்.நன்றி

3:48 AM  
Blogger அன்பு said...

பலரும் தம் குடும்ப மருத்துவ அந்தரங்கங்களை உற்றார் உறவினருக்குக் கூடச் சொல்லாதிருக்கும்போது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டுமென்று உங்கள் வலைப்பூவில் பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள்.

- சேதுக்கரசி

12:00 AM  
Blogger Jay said...

Thangamani,சிவா,மதி கந்தசாமி, பரஞ்சோதி, அன்பு, selvanayaki, மூர்த்தி,
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

NS,
I have used Unicode. I'm not sure why you are not able to view my site in Tamil. I will let you know if I find out anything. Thanks.

பத்மா,
உங்களுக்கு மின்மடல் அனுப்பியிருக்கிறேன். நன்றி.

ஜெயஸ்ரீ

2:51 PM  
Blogger Unknown said...

my 7 month male baby “Trisomy-21, down’s syndrome” treatment which hospital

8:33 AM  

Post a Comment

<< Home